போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசிக்கும் சலபதிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார். போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால் அதை விசாரித்து, போலி என்பது கண்டறிந்தால், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவு அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின்படி, சம்பந்தப்பட்ட வாரிசுகள் மீண்டும் புகார் அளித்துள்ளனர். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத் திருத்தத்துக்குப் பின் அளித்த இரண்டாவது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் புகார் குறித்து விசாரித்து 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டார்.