அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த 11ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எல்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால், நட்சத்திர விடுதியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுக-வின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்த நிலையில், அது தொடர்பாக விவாதிக்க இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தெரிகிறது.