காவேரி நீர்திறப்பு குறித்து தமிழ்நாடு சார்பாக தொடர்ந்த இடையீட்டு மனுவை, விசாரிக்க ஒட்டுமொத்த காவேரி விவகாரத்தையே விசாரிப்பதாற்காக புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு புதிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதாவது தமிழகம் சார்பில் கேட்டிருப்பது இந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நிலுவைத் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுங்கள் என்று கூறியுள்ளது. ஆனால் கர்நாடக சார்பில் அளித்த புதிய இடையீட்டு மனுவில் மேகதாது அணை அமைக்க அனுமதியுங்கள், அதன் வாயிலாக இந்த நதிநீர் பிரச்சனைகளில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று கூறியிருக்கின்றனர்.
மேகதாதுவில் அணை அமைக்கும் பட்சத்தில் நாங்கள் நிறைய தண்ணீரை சேமித்து வைக்க முடியும், அப்படி சேமித்து வைக்கும் பட்சத்தில் வறட்சி காலத்தில் தமிழ்நாடு அரசு கேட்கும்போது தேவையான தண்ணீரை நாங்கள் தொடர்ச்சியாக கொடுக்க முடியும் என்ற தங்களது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டுக்கான நீரை எங்களால் முடிந்த அளவுக்கு கொடுத்து வருகிறோம், நேற்றைய தினம் வரை 10,000 கன அடி நீரை தமிழகத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தோம், இன்று 12,000 அடி வீதம் தண்ணீர் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் மாநிலத்திலும் கடுமையான வறட்சி நிலவுகிறது, மழைப்பொழிவு குறைந்து வருகிறது, நீர் வரத்தும் குறைவாகவே இருக்கிறது, எனவே இதையெல்லாம் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. காவேரி விவகாரத்தை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கவுள்ள நிலையில் கர்நாடக இடையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஏற்கனவே மேகதாது அணை தொடர்பான வழக்கின் போது, மேகதாது அணை அமைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், தமிழ்நாடு கேட்கும்போதெல்லாம் தண்ணீர் தர முடியும் என்றும் சொல்கிறீர்கள் ஆனால் அதற்கு என்ன உறுதி, தற்போது கூட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அதன் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவுகளை பிறப்பிக்கும் போதும் கூட கர்நாடகா அரசு உரிய நீரை தமிழகத்திற்கு தராமல் இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் நீங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்போம் என்கிறீர்கள் என்று நீதிபதிகளே கேள்வி எழுப்பியுள்ளனர். இதே சந்தேகத்தை தமிழ்நாடு அரசும் அப்போது தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் மேகதாது அணை குறித்து கர்நாடகாவின் கேள்விக்கு தமிழக அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது என்பது விரைவில் தெரியும்.