பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, கோ டாடி போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வந்தன..

ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மெட்டாவின் இந்த நடவடிக்கை இந்தியாவிலும் எதிரொலித்தது.. இதன் காரணமாக மெட்டாவில் வேலை செய்த இந்தியர்கள் பலரும் தங்கள் வேலையை இழந்தனர்..
இந்நிலையில் மெட்டா நிறுவனம் மீண்டும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.. உயர்பதவிகளில் உள்ள சிலரை கீழ்மட்ட பதவிக்கு நியமிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் செயல்திறன் மதிப்பாய்வுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு “துணை மதிப்பீடுகளை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, இது நிறுவனத்தில் அதிக பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கலாம். சமீபத்திய செயல்திறன் மதிப்பாய்வுகளில் தோராயமாக 7,000 ஊழியர்களை “சராசரிக்கும் கீழே உள்ள நிலையில் உள்ளனர்” என்று வரிசைப்படுத்தியது.
எனவே வரவிருக்கும் வாரங்களில் அதிக ஊழியர்களை வெளியேறுவதற்கு மதிப்பீடுகள் வழிவகுக்கும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது.. போதிய அளவு ஊழியர்கள் பணியில் இருந்து விலகவில்லை என்றால் நிறுவனம் மற்றொரு சுற்று பணிநீக்கங்களை பரிசீலிக்கும்” என்று கூறப்படுகிறது.. இதனால் பணிநீக்கம் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட அந்நிறுவனம் தயாராக உள்ளது என்று கூறப்படுகிறது..
மெட்டாவை தொடர்ந்து அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர், இண்டெல், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.. 2023-ம் ஆண்டில் மட்டும், 300க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..