10% தள்ளுபடி திட்டத்தை மார்ச் 1ஆம் தேதியான இன்று முதல் நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் மக்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. மெட்ரோ ரயில் அமைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இது சென்னை மெட்ரோ ரயில் நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பதால், மக்கள் சென்னை முழுவதும் எளிதாகப் பயணிக்க முடியும். மேலும், பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, தினசரி பயணிகளுக்கு வசதியான தேர்வாக மெட்ரோ ரயில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் மெட்ரோ ரயில் சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. அதேபோல், மெட்ரோ ரயில் கட்டுமான கட்டத்திலும் அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளிலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேசமயம், மெட்ரோவில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பதில் அமைப்புகள் உள்ளன.
குறிப்பாக, பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. மெட்ரோ கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயணிக்கவும் முடியும். இந்நிலையில், 20 அல்லது அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கும்போது 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் நிறுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், ”சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி மார்ச் 1ஆம் தேதியான இன்று முதல் திரும்பப் பெறப்படுகிறது.
டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.