எம்.எல்.ஏ. கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் என்பவர் கடந்த 2005இல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏவும், எம்.பி.யுமான அதிக்யு அகமது கைது செய்யப்பட்டார். மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சி உமேஷ் பால் என்பவராவார். முக்கிய வழக்கில் சாட்சி என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது. இதனால், உமேஷுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரக்யாராஜ் நகரில் பரபரப்பான சாலை அருகே உள்ள தனது வீட்டிற்கு உமேஷ் காரில் சென்றார்.
அப்போது, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது அங்குவந்த கும்பல், கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது. அதன்பிறகு உமேஷ் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது பாதுகாவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உமேஷ் பால் மற்றும் அவரது பாதுகாவலர் சந்தீப் நிஷத் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக கூறினார். மற்றொரு பாதுகாவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.