தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் என நம்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் குரங்கம்மை பரவல் குறித்து அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ச்சியாக பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகள் முகங்களிலோ முழங்கைக்கு கீழ் ஏதாவது கொப்பளங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

63 நாடுகளில் இருந்த குரங்கம்மை பாதிப்பு 72 நாடுகளில் கூடுதல் பாதிப்பாக பரவி உள்ளது. உலகம் முழுவதும் 14,533 பேருக்கு பாதிப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை டெல்லி, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கேரளா, ஆந்திரா எல்லைகளில் குரங்கம்மை பாதிப்பு குறித்து கண்டறிவதும், தொடர்ந்து மாநில எல்லைகள் வழியாக வருபவர்களுக்கு ஸ்டேச்சுரேசன் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மதுரைக்கு தினந்தோறும் மூன்று வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு ரேண்டமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை இரண்டு சதவீதம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு டெங்கு, மலேரியா நோய்களிடம் இருந்து மக்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் அவசியமில்லாமல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொசு மருந்து, புகை மருந்து அடிக்கவும், லார்வாக்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த கம்பூசியா மீன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து ஒன்றிய அரசு எப்போது அறிவுறுத்துகிறார்களோ அப்போது உடனடியாக பள்ளிகளில் போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி தனியார் நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி போட வேண்டிய சூழ்நிலையை மாற்றி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று 75 நாட்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. WHO, ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் இந்த நோய்க்கான தீர்வை அறிவுறுத்துகிறார்களோ அப்போது மட்டுமே செய்யப்படும். இப்போது 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலிக்கிறது. தமிழகத்தில் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் எடுத்துள்ளோம் அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.