முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விதிகளின்படியே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கடந்த 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அதை குறிப்பிட்டு முக.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த 4ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது, தண்ணீர் திறக்கப்படுவது தொடர்பாக கேரள அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்தே, 5ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதாக முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 138.85 கன அடி நீர் இருப்பதாகவும், அணைக்கு விநாடிக்கு 6,942 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதகாவும், 5ம்000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அணை நிர்வாகக் குழு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக கேரள அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் அளிக்க, முல்லை பெரியாறு அணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.