திருப்பூர் பகுதிகளில் மர்ம ஆசாமி ஒருவர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போர்வைகளை போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன். விவசாயம் செய்து வரும் இவர் தோட்டத்திலேயே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தங்களுடைய பாதுகாப்பிற்காக தோட்டத்தை சுற்றி சிசிடிவி கேமராக்களை வைத்திருக்கிறார் இவர்.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்த இவர், தான் இல்லாத நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பரிசோதித்த போது தான் அவற்றின் வயர்கள் அறுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதிவு செய்திருந்த காட்சிகளை கண்ட அவருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டிருந்த காணொளிகளில் முகமூடி அணிந்திருந்த நபர் ஆடை ஏதும் அணியாமல் நீண்ட போர்வையை உடல் முழுவதும் பொருத்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டபடி செல்லும் காட்சி அந்த சிசிடிவி யில் பதிவாகிருந்திருக்கிறது.
இதனையடுத்து அவர் இது குறித்து பல்லடம் காவல்துறையில் புகாரளித்தார். பல்லடம் காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திருக்கிறது. மர்மமாக சுற்றி தெரியும் நபர் யார் அவர் தனியாக வந்தாரா? இல்லை அவர்கள் ஒரு கும்பலை சார்ந்தவர்களா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.