விழுப்புரம் அருகே வீட்டில் திருட வந்த இடத்தில் தான் வைத்திருந்த மிளகாய் பொடியால் திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் சுவாரசியமான சம்பவம் நடந்தேறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூரை அடுத்த சத்திய கண்டனூர் அரவிந்த் நகரைச் சார்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வந்திருக்கிறார். இரவு சுமார் 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த இவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது திருடர்கள் இரண்டு பேர் அவர் வீட்டின் பீரோவை உடைத்து பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்டவரும் அவரது மனைவியும் கத்தி கூச்சல் போட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து திருடர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது இரண்டு திருடர்களில் ஒருவன் 20000 ரொக்க பணத்துடன் தப்பி ஓடி விட்டான். மற்றொரு திருடனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது பொதுமக்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து பொதுமக்களின் மீது வீச முயன்றிருக்கிறான். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளின் காரணமாக அவன் வைத்திருந்த மிளகாய் பொடி அவனது கண்ணிலேயே பட்டுவிட்டது. அதன் பிறகு திருடனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனைக் கண்டு சுதாகரித்துக் கொண்ட பொதுமக்கள் திருடனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவனிடம் விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தைச் சார்ந்த சுப்புராயன் என்பவரது மகன் முனுசாமி என்பது தெரிய வந்தது. மேலும் பணத்துடன் ஓடிய மற்றொரு திருடனின் பெயர் துரை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் திருடனை கைது செய்த போலீசார் அவனை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.