அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசியது தொடர்பாக நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது..
ஈரோடு திருநகர் காலனியில் கடந்த 13-ம் தேதி பிரச்சாரம் செய்த சீமான் அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதுதொடர்பாக அருந்ததி சமூகத்தை சேர்ந்த பல்வேறூ அமைப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர்.. இந்நிலையில் இந்த புகாரில் ஈரோடு கிழக்கு வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, சாதி, சமூகம் அடிப்படையில் வெவ்வேறு சமூகத்தினர் இடையே பகை அல்லது வெறுப்புணர்வை தூண்டுதல் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..
இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உரிய விளக்கம் அளிக்க தவறினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்..
முன்னதாக இன்று காலை நாம் தமிழர் வேட்பாளர் மீது ஈரோடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபப்ட்டது.. கடந்த 20-ம் தேதி அனுமதியின்றி ஆலமர தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக மேனகா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இந்த சூழலில் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..