2023 உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரில் அடுத்த போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. இதை அடுத்து பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி, பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் பாக்கர் ஜமான் ஆகிய 4 வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி சந்தித்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூரு கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இன்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அப்துல்லா ஷபிக் அந்த அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். சமீபத்தில் தான் ஷபிக் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் வீரர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் இருக்கிறது.