தமிழ்நாட்டில் அடுத்தடுத்து டெக் சேவை நிறுவனங்கள் புதிதாக தனது வர்த்தக அலுவலகத்தை திறந்து வரும் வேளையில், கடந்த வருடம் மதுரையில் அமெரிக்க நிறுவனமான pinnacle இன்போடெக் அலுவலகத்தை திறப்பதாக அறிவித்தது.
மதுரை ஐடி துறை வளர்ச்சியில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் pinnacle இன்போடெக் நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
Pinnacle Infotech நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலையிடமாக கொண்டு இயங்கினாலும் இந்தியாவில், அதுவும் மதுரையில் தனது உலகளாவிய மிகப்பெரிய இன்ஜினியரிங் சென்டர் ஆப் எக்ஸ்சலென்ஸ்-ஐ அமைத்துள்ளது.
Pinnacle Infotech நிறுவனத்தின் மதுரை அலுவலகத்தின் கட்டுமான பணிகள் குறித்த புகைப்படங்கள் டிவிட்டரில் பலர் பதிவிட்டு வந்த நிலையில் தற்போது பெரிய அலுவலகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த மதுரை அலுவலகம் சுமார் 287 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 3500 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது.
இந்த நிறுவனம் கட்டிடகலை, இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான (AEC) நிறுவனங்களுக்குக் பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங் (BIM) தீர்வுகளை உலகளவில் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் BIM சேவைகளை திட்ட ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, சொத்து மேலாண்மை, இடர் குறைப்பு, தளவாட திட்டமிடல் மற்றும் செலவு மேம்படுத்தல் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இருந்து இயங்கும் Pinnacle Infotech நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் இந்தியாவில் துர்காபூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், மதுரை ஆகிய இடத்தில் அலுவலகத்தை வைத்து சுமார் 40 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.