பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் புழங்கும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு அநாமதேயர்களிடமிருந்து இன்பாக்ஸ் வாயிலாக எழும் தொந்தரவுகளுக்கு முடிவு கட்ட இந்த புதிய அப்டேட் உதவும்.
இதன்படி இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்களது இன்பாக்ஸ் பயன்பாட்டில் கூடுதல் அதிகாரம் பெறுகிறார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் நேரடி தகவல்களை இனி தவிர்ப்பது எளிதாகும். தாங்கள் பின்தொடராத பயனருக்கு, அநாமதேயர்கள் டைரக்ட் மெசேஜ் அனுப்புவதில் எண்ணிக்கை அடிப்படையில் கட்டுப்பாடுகள் அமலாகும். மேலும், புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ் ஆகியவற்றை முதல் மெசேஜாக அநாமதேயர்கள் அனுப்புவதும் தடை செய்யப்படுகிறது.
ஜூன் மாதத்திலிருந்து பரீட்சார்த்த செயல்பாட்டில் இருக்கும் இந்த அப்டேட், பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. பரஸ்பரம் பின்தொடரல் இல்லாத பயனர்கள் இடையே, தனிப்பட்ட உரையாடலை தொடங்குவதற்கு முன்னர், ஒரேயொரு மெசேஜ் ரிக்வஸ்ட் மட்டுமே அனுப்ப இன்ஸ்டாகிராம் அனுமதிக்கும். அதுவும் டெக்ஸ்ட் அடிப்படையில் மட்டுமே இயலும். அதற்கு எதிர் முனையில் இருப்பவர் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே உரையாடல் அடுத்த கட்டத்துக்கு நகர வாய்ப்பாகும். விருப்பம் இல்லாதோர் அநாமதேயரின் மெசேஜ் ரிக்வஸ்டை மறுதலிக்கலாம் அல்லது அநாமதேயரை பிளாக் செய்து விட்டும் சுலபமாக கடந்து செல்லலாம்.
இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைகள் அனைத்தும் அநாமதேயர்களின் தொந்தரவுகளை தவிர்க்கும் நோக்கில் மட்டுமே மெட்டா கொண்டு வருகிறது. மற்றபடி இன்ஸ்டாகிராமில் பரஸ்பரம் ஒருவரையொருவர் பின்தொடரும் பயனர்கள் இடையே இந்த கட்டுப்பாடுகள் கிடையாது. சுமார் 200 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம், இதன் மூலம் பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என நம்புகிறது.