திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள மாவடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் திருப்பதிராஜா (25). இவர் பனை ஏறும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தற்போது சாத்தான்குளம் காமராஜ் நகர் பகுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், திருப்பதிராஜா மாவடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, திருப்பதிராஜா தன் காதலை வெளிப்படுத்தியும் அந்த இளம்பெண் அவரது காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் திருமணம் நிச்சயித்து, சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. இதனால் விரக்தியடைந்து காணப்பட்ட திருப்பதிராஜா, கடந்த 12 ஆம் தேதி சாத்தான்குளத்தில் விஷம் குடித்துவிட்டு, உடன்குடிக்கு சென்று அங்கு வசித்து வரும் உறவினர் சுயம்புலிங்கம் (26) என்பவருக்குச் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வீட்டிலேயே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை கேட்டு பதறிப்போன சுயம்புலிங்கம், அவரை அக்கம் பக்கத்தினர் துணையுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் அவரது உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.