தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகேயுள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பேபி. இவர் தனது வீட்டிற்கு பின்புறம் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இஅவரது பட்டாசு கடையில் இவரது உறவினரான கொட்டையூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ரவி (45) பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் கடையில் வெடி செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசு கடை தீப்பற்றி எரிந்தது. இதில் அங்கு பணியாற்றிய ரவி படுகாயம் அடைந்தார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்து போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி, கபிஸ்தலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு கடையின் உரிமையாளர் பேபி சண்முகத்தின் மகன் பிரபாகரன் வயது 40 என்பவரை கைது செய்துள்ளனர்.