தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு சென்ற மாதம் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய நிலையில் தான் இந்த விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த உத்தரவையும் மீறி வகுப்புகள் நடைபெறுவது கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதாவது, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறதா? என்பதை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் கவனிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.