மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (52). இவருடைய மனைவி பாண்டியம்மாள்(45). இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர். திருப்பூரில் கூலித்தொழிலாளியாக ரவி வேலை செய்து வந்தார். தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் மேலூரில் பூ கடை வைத்திருந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் அருக்கம்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு வந்த ரவி அருக்கம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூங்கும் போது,மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் காலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்த மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் ரவியின் மனைவி பாண்டியம்மாளுக்கும், மேலூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது, இதை தெரிந்துகொண்ட ரவி அவரது மனைவி பாண்டியம்மாளை கண்டித்துள்ளார்.
அதனால் பாண்டியம்மாளும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து ரவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய மண்வெட்டியை கைப்பற்றிய காவல்துறையினர் பாண்டியம்மாளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனை மேலவளவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.