திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம், மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா(17) திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல யூனிபார்ம் அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சக நண்பர்கள் சாப்பிட சென்ற போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், துனை ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.