திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக திகழ்வது இத்திருத்தலமாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணமிருப்பர். மேலும் மலைமேல் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம், காதுக்குத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.
இந்நிலையில் சென்னை ஆவடி அருகே உள்ள கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி லட்சுமி (40). இவர்கள் தங்கள் உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உள்ள ஆர்.சி.சி.மண்டபத்தில் காது குத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மண்டபத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறி கழன்று லட்சுமியின் தலைமீது விழுந்தது.
இதில் காயமடைந்த லட்சுமி மயக்கமடைந்தார். உறவினர்கள் லட்சுமியை, மலைக்கோவில் வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி லட்சுமியின் உறவினர்கள் கோவில் நிர்வாகத்தினரை கடுமையாக விமர்சித்தனர், மேலும் கோவிலில் இருக்கும் மின்சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதில்லை, கோவில் நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் திருத்தணி முருகன் கோவில் பரபரப்பாக காணப்பட்டது.