தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு 97.85 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது.
அதேபோல 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8,03,385 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகளின் எண்ணிக்கை 4,05,753 மாணவர்களின் எண்ணிக்கை 3,49,697 என்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தகைய நிலையில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும் கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரும் விதத்தில், துணை தேர்வு தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 12ஆம் தேதி துணை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. ஆகவே மாணவர்கள் மனதளர்ச்சி அடையாமல் விடாமுயற்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து துணை தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.