செல்போன் ஆப் மூலமாக உடனடியாக கடன் பெறும் வசதி தற்போது உள்ளது.இது போன்ற நிறுவனங்கள் பல உள்ளன. இந்த நிறுவனங்களில் அதிக வட்டி பெறப்படுகிறது.இவ்வாறு அதிக வட்டியில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலித்த பிறகும், மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாக நாடு முழுவதும் காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளது.
குறிப்பாக கடன் பெற்றவர்கள் மற்றும் அவரது உறவினர்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக சொல்லி மிரட்டி, இந்த கும்பல் பல கோடி ரூபாயை ஏமாற்றி பறித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவற்துறையினர், அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பல் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்தது தெரிந்தது.
மேலும் இதில் சீன கும்பலுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 22 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த இந்த நடவடிக்கையில் ரூ.500 கோடி மதிப்பிலான மோசடி தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.