தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜாபுரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் இன்று காலை எட்டு மணிக்கு டீ குடிப்பதற்காக டீ கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சரவணகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணகுமார் உயிரிழந்தார்.
இது குறித்து குரும்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜி சரவணன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரவணகுமாரின் மனைவி மரிய நிர்மலா தேவி, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் 14வது வார்டு கவுன்சிலராக, சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2019 ஆம் வருடம் நவம்பரில் சரவணகுமாரின் தம்பி குமாரை சிலர் கொலை செய்துள்ளனர். இதுவும் இவரது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம், என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.