நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன் பகுதிக்கு மது போதையில் வந்த உள்ளூர் வாசி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது கொடநாடு சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்ததும். உடனே, சிலைக்கு அருகில் சென்ற அந்த போதை ஆசாமி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் மீது ஏறி கையில் வைத்திருந்த குடையை உயர்த்திப் பிடித்து எம்.ஜி.ஆர் சிலை நனையாதவாறு குடைபிடித்தார்.
நீண்டநேரமாக எம்ஜிஆர் சிலைக்குக் குடைபிடித்தபடி நின்றுகொண்டிருந்த போதை ஆசாமியை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்போது இந்த வீடியோவோடு சேர்த்து அந்த போதை ஆசாமியும் வைரலாகி வருகிறார். போதையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிலை நனையக் கூடாது என குடைபிடித்த ரசிகரை வலைவீசித் தேடிவருகிறார்களாம் உள்ளூர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.!