சென்னையில் 47 வயதுடைய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாதத்திற்கு ஒரு முறை அரியலூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2020-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் மகள் திடீரென அலறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனது மகளிடம் விசாரித்தபோது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வீடு எடுத்து மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அந்த பெண் இயற்கை உபாதைக்காக வெளியே வந்துள்ளார் அப்போது அவரது கணவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கீழே விழுந்ததில் அந்த பெண்ணின் தலையில் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் அவரது கணவர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் அரியலூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். இதில், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததற்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், மனைவியை அடித்து துன்புறுத்தியதற்காக இரண்டு வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதைத்தொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.