கோயமுத்தூர் மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் காஞ்சிமலை பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அங்கிருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்ற நபர் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது. அருகில் உள்ள மத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் தரப்பில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் உயிரிழந்த சஞ்சய் சவுத்ரி என்பவரின் மனைவி சமீப காலமாக கணவரை விட்டு பிரிந்து பீகார் மாநிலத்தைச் சார்ந்த முகேஷ் சானி என்பவர் உடன் வசித்து வந்திருக்கிறார் என்பதும், சஞ்சய் சாத்திரி தன்னுடைய மனைவியை தன்னுடன் வருமாறு அவ்வப்போது வற்புறுத்தி இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட கள்ளக்காதலனான முகேஷ் ஷானி தன்னுடைய நண்பரான குபேந்திரனுடன் இணைந்து சஞ்சய் சவுத்ரியை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை மதுபான கடைக்கு அழைத்து வந்து மது அருந்த வைத்து போதையில் இருந்த சஞ்சய் சாத்திரியை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.
இந்த கொலைக்கு முகேஷ் ஷானியின் நண்பர் குபேந்திரன் உதவி புரிந்திருக்கிறார் என்ற விபரமும் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து கொலை செய்த இருவரையும் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.