அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்த வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2️ பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ரேணுகா மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலி நகர்ந்து செல்வதை போல உணர்ந்த ரேணுகா திடுக்கிட்டு எழுந்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் தாலி செயினை பிடித்துக் கொண்டு ரேணுகா அவர்களுடன் போராடி இருக்கிறார். அதன் பிறகு தாலி ஜெயின் பாதி பகுதியுடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதன் பிறகு ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்தனர்.
ஆனால் தாலி செயினை பறிப்பதற்கு முன்பாகவே பீரோவை உடைத்து அதிலிருந்து தோடு, ஜிமிக்கி, வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என்பது தெரிய வந்தது. ஆகவே வீட்டிற்கு வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை கொள்ளையர்கள் மயக்க பிஸ்கட் கொடுத்து மயக்கிவிட்டு அதற்கு பின்னர் சவகாசமாக கொள்ளையடிப்பதற்கு முயற்சித்திருக்கிறார்கள்.
நாயை மயக்கிவிட்டு பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 3 பவுன் தாலி செயின், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஆண்டிமடம் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.