புதுவை கோம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்கிறது இதன் தலைவராக கோம்பாக்கத்தைச் சேர்ந்த எம்பெருமாள்( 69) என்பவர் இருக்கிறார். இந்த சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளராகவும், முதுநிலை எழுத்தாளராகவும் பார்ப்பன்சாவடியைச் சேர்ந்த கதிரவ (48) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர் தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். இதற்கு நடுவே இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, 5 பேர் அடங்கிய தணிக்கை குழுவைச் சார்ந்தவர்கள் கடந்த 18ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது 201 நகை கடன் கணக்குகள் உள்ளதாகவும் அதில் பாதுகாப்பு பெட்டகத்தில் 198 நகை கடன் கணக்கு உண்டான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், 18 நகை கடன் கணக்குகளுக்கு உண்டான 58.500 கிராம் மதிப்பிலான நகைகள் காணாமல் போய் இருப்பதும் தெரியவந்தது.
இதன் வெளிச் சந்தை மதிப்பு 33 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் அந்த நகைகளை திருடி சென்றதும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் திடீரென்று விடுமுறையில் சென்று விட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எம்பெருமாள் முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.