கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா என 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏழுமலை சென்ற வருடம் உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை மூத்த மகனான கமலக்கண்ணன் நிர்வாகித்து வந்தார்.
இத்தகைய நிலையில், திருமணம் ஆகாத கமலக்கண்ணனின் கடைசி தம்பி இளையராஜா என்பவர் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டினை கட்டுவதற்காக கூடுதலாக கடன் பெற்றுள்ளார். இதனால் இளையராஜாவுக்கு கடன் தொல்லை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆகவே தன்னுடைய மூத்த அண்ணன் கமலக்கண்ணனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து நாள்தோறும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
அந்த வகையில், நேற்று முன்தினமும் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தர வேண்டும் என்று தெரிவித்து அண்ணனிடம் வாய் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இளையராஜா இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் கமலக்கண்ணன், தம்பி இளையராஜாவை எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் கீழே போட்டு மிதித்தும் அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இளையராஜாவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவின் அண்ணன் கமலக்கண்ணனை கைது செய்தனர்.