12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக திருப்பூர் 97.79 சதவீதம் தேர்ச்சி பெற்று 2வது இடத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்திலும் இருக்கிறது.
அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த வருடம் இயற்பியல் வேதியல் போன்ற பாடங்களில் சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
அதேபோல இயற்பியல் பாடத்தில் 812 மாணவ, மாணவியரும், வேதியியல் பாடத்தில் 3,909 மாணவ, மாணவியரும், உயிரியல் பாடத்தில் 1494 மாணவ, மாணவியரும் கணித பாடத்தில் 690 மாணவ, மாணவியரும், தாவரவியல் பாடத்தில் 340 மாணவ, மாணவியரும், விலங்கியல் பாடத்தில் 154 மாணவ, மாணவியரும், கணினி அறிவியல் பாடத்தில் 4618 மாணவ, மாணவியரும், வணிகவியல் பாடத்தில் 5678 மாணவ, மாணவியரும், பொருளியல் பாடத்தில் 1760 மாணவ, மாணவியரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4051 மாணவ, மாணவியரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1334 மாணவ மாணவியரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இத்தகைய நிலையில், தமிழ் பாடத்தில் வெறும் இரண்டு மாணவிகள் மட்டுமே 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த லக்ஷயா ஸ்ரீ மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி உள்ளிட்ட இருவர் மட்டுமே தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் லக்ஷயா ஸ்ரீ ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்தவர் என்று கூறப்படுகிறது, நந்தினி திண்டுக்கல்லில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இருவருமே தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.