நம்முடைய அண்டை மாநிலமான புதுவையில் கடந்த சில தினங்களாகவே கோடையில் சுட்டெரித்து வருகிறது. அதே நிலை தான் தமிழகத்திலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் புதுவை முழுவதும் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் புதுவை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று உள்ளிட்டவை சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. அதே தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்கிறது. அதேபோல காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இன்று காலை முதல் புதுவை கடற்கரை, உப்பளம், ராஜ்பவன், உருளையான்பேட்டை, முத்தியால்பேட்டை போன்ற நகரப் பகுதிகளிலும், அதேபோல பாகூர், திருக்கனூர் மதகடிப்பட்டு, சேதரப்பட்டு சோம் பட்டு, காலாப்பட்டு போன்ற கிராமப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களாகவே புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இந்த மழையின் காரணமாக புதுவையில் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த திடீர் மழையின் காரணமாக, காலையில் வேலைக்கு செல்பவர்கள் சாலையோரமாக கடை வைத்திருப்பவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.