சென்னை உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் குண்டர்கள் மருத்துவமனை மற்றும் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய கடைகளுக்கு சென்று மாமுல் வசூல் செய்வது சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற சம்பவம் நிஜ வாழ்விலும் நடைபெறத்தான் செய்கிறது.இதுபோன்று ரவுடிகள் மாமூல் வாங்கி பிழைக்கும் அளவிற்கு சுதந்திரம் அளித்தது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை குன்றத்தூர் அடுத்த தண்டலம் தொகுதியைச் சேர்ந்தவர் கௌதம்(26). பல் மருத்துவராக இருக்கின்ற இவர் திருமுடிவாக்கத்தில் பல் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு நேற்று வருகை தந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கஞ்சா கருணா என்ற கருணாகரன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் மருத்துவர் கௌதமன் கை மற்றும் கழுத்துப் பகுதி மற்றும் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மயங்கி சரிந்து விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி சென்று விட்டனர். அங்கே இருந்தவர்கள் மருத்துவர் கௌதமை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் அதே பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கின்ற செந்தமிழ்ச்செல்வன் பல் மருத்துவரை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், ஆனால் கௌதம் தர மறுத்ததால் அவருடைய கூட்டாளிகளை அனுப்பி மருத்துவர் கௌதமை வெட்டியதும் இந்த விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செந்தமிழ்செல்வன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.