கோவை நகர ஆயுதப் படை காவல் துறையில் பணிபுரிபவர் காளிமுத்து (29). இவர் கடந்த 2013-ஆம் வருடம் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள மேலத்துலுக்கன்குளம் ஆகும். காளிமுத்து சாலை தில்லை நாயகி (25) என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கோவை, காந்திபுரத்தில் அரசு பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கி குண்டு அவரது வலது பக்க வயிற்றை துளைத்து பின் வழியாக வெளியேவந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் பக்கத்திலிருந்த அரங்கில் உள்ளவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த காளிமுத்துவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். துப்பாக்கி குண்டு அவரது சிறுநீரகத்தைத் துளைத்ததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், இன்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார். அவரது உடற்கூறு ஆய்விற்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பறகு அவரது உடல் மனைவி சாலை தில்லைநாயகியிடம் ஒப்படைக்கப்பட்டது. கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்
காவல்துறையினரின் விசாரணையில், காளிமுத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், திரும்ப அந்த பணத்தை ரம்மி விளையாடி மீட்டு விடலாம் என்று நினைத்து தொடர்ந்து விளையாடி உள்ளார். இதற்காக தனது நண்பர்களிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, பணத்தை ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். கடன் தொகையை தனது நண்பர்களுக்கு திருப்பி கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தான் அவரை அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் போலீஸ்காரர் இந்த விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது, கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.