தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல் மங்கல்பெட் பகுதியில் வசித்து வரும் முகமது பைசல் என்ற இளைஞர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு வெளியே நேற்று இரவு எட்டு மணியளவில் நின்றுகொண்டிருந்தார்.அந்த சமயத்தில், அங்கு பைக்கில் வந்த முகமூடி கும்பல் ஒன்று பைசலை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இந்த பயங்கர தாக்குதலில் படுகாயமடைந்த முகமது பைசல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து, பைசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பனம்பூர், பஜ்பி போன்ற நகரங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தட்சிண கன்னடாவில் இதே வாரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்நிலையில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் தொடரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த பைசல் ஷியா பிரிவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டார் தெரிந்து எதிர்ப்பு கிளம்பியதாகவும் இதன் காரணமாக பைசல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.,