கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள கீழ்மணக்குடி பகுதியில் ஒரு தனியார் தும்பு மில் இயங்கி வருகிறது. இங்கு பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி நானாக் ஷா(32) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவருடன் மற்றொரு வடமாநில தொழிலாளியான ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால். சந்தேமடைந்த மில் தொழிலாளிகள், அவர்களின் அறையின் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால், அறைக்கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, நானாக் ஷா தலையில் சிமெண்ட் கல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், உடனிருந்த ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தென்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலையான நானாக் ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தென் தாமரைக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர். வடமாநில தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.