கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பவித்ரா (20). இவர் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ கடைசி வருடம் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பவித்ரா மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். எனினும் பவித்ரா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று தனியாக வீட்டில் இருந்த பவித்ரா திடீரென தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றியதில் உடல் கருகி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மகாராஜாகடை, காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் மகாராஜாகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.