கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் வசிப்பவர் மோகன்(55). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இவர்களுக்கு ராஜ்குமார் (32), ராஜ்கமல் (30) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சாப்ட்வேர் என்ஜினீயரான ராஜ்குமார் கல்யானமாகி மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியான ராஜ்கமலும் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ராஜ்கமலுக்கும், வேப்பூரில் உள்ள என்ஜினீயர் குணசுந்தரிக்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்நிலையில் மாமியார் விஜயலட்சுமியும், மருமகள் குணசுந்தரியும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்களை அழைத்து வர பைக்கில் பேருந்து நிலையம் சென்ற ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை வீட்டிற்கு அழைத்து சென்றார். அதன் பிறகு தனது தாய் விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக மீண்டும் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு சென்ற ராஜ்கமல், சென்னை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே விஜயலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் வருவதை பார்த்த ராஜ்கமல், உடனே பைக்கை திருப்பினார். அப்போது சவ ஊர்வலத்தின் போது ரோட்டில் வீசப்பட்டு மழையில் நனைந்து கிடந்த மலர் மாலை பைக்கின் சக்கரத்தில் சிக்கி பைக் கவிழ்ந்தது. எதிர்பாராத இந்த விபத்தில் நிலைதடுமாறி விழுந்த ராஜ்கமலின் தலை, பாலத்தின் சுவரில் மோதி மண்டை உடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதார். தாயின் கண்முன்னே மகன் உயிர் பிரிந்த கொடூர சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.