ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மரத்தில் கட்டி வைத்தது மட்டும் அல்லாமல் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், கணவரின் நண்பருடன் அந்த பெண் இருந்துள்ளார். இதனை நேரடியாக பார்த்ததில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் நோக்கத்தில் இந்த செயலை செய்துள்ளார்.
அந்த ஆண் நபருக்கும், இதேபோன்ற தண்டனையை அவர்கள் கொடுத்துள்ளனர். அவரையும் மரத்தில் கட்டி வைத்து கேள்வி கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிந்ததும், நேற்றிரவு காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர், இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து, ராஜஸ்தானில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த அரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என ஆளும் காங்கிரஸ் அரசை குறை கூறியுள்ளார் . இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் ராஜஸ்தான் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி கேட்டு கொண்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறந்த மருத்து சிகிச்சை அழைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் அந்த பெண்ணின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.