வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக, ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு அகதியாக சில வருடங்களுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (34). இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில், ரஞ்சிதாவின் ஒரு கிட்னி இல்லாதது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதாவுக்கு, அப்போது தான் நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்துள்ளது. கணவரின் கட்டாயத்தினால் நடந்த அந்த அறுவை சிகிச்சையில் கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த ரஞ்சிதா பிரஷாந்திடம் விசாரித்துள்ளார்.
விசாரணையில் மனைவி ரஞ்சிதாவுக்கே தெரியாமல் அவரது கிட்னியை கணவர் பிரசாந்த் திருடி விற்றுள்ளார். பிரசாந்த் வேலை வெட்டிக்கு செல்லாமல் நாட்களை கழித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் கிட்னியை விற்றால் பணம் கிடைக்கும் என்ற தகவல் பிரசாந்துக்கு தெரிய வந்தது. அப்போது ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிரசாந்த் கிட்னியில் கல் இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
தன் மீது கணவன் அதிகமான அன்பு வைத்திருப்பதாக நினைத்து ரஞ்சிதாவும் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டுள்ளார். திட்டப்படி ரஞ்சிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. டாக்டர் உதவியுடன் கல்லை எடுப்பதாக கூறி ஒரு கிட்னியை எடுத்துள்ளார் பிரசாந்த். சிகிச்சைக்கு பிறகு கிட்னியை விற்று நிறைய பணம் வாங்கி கொண்டு அந்த பணத்தை வைத்து பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இதை அறிந்த மனைவி ரஞ்சிதா பிரசாந்தை கைது செய்ய கோரி ஆதாரங்களோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் இருந்த பிரசாந்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.