பொன் விளைந்த களத்தூர் பழைய காலணியை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது மனைவி சம்பூரணம். இவர்களுடைய மகள் ஜெயந்தியை கடந்த 12 -ஆண்டுகளுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள டார்ஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான டார்ஜன் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் மனைவி ஜெயந்தியின் நடத்தை மீது டார்ஜனுக்கு சந்தேகம் வந்ததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் ஜெயந்தியின் தாய், தந்தை இருவரும் டார்ஜனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டார்ஜன் மாமனார் துலுக்காணம் , மாமியார் சம்பூர்ணம் இருவரையும் சரமாரியாக கட்டையால் அடித்துள்ளார். மது போதையில் இருந்த டார்ஜன், மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு மாமனாரை விரட்டிக்கொண்டு கட்டையால் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருமகன் தாக்கியதில் உயிர் இழந்த மாமனார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மாமனார் இறந்ததும் தலைமறைவான மருமகன் டார்ஜனை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.