சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28- ஆம் தேதி கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக மனைவியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அங்கிருந்த அவரின் மாமியாரை அரிவாள்மனையால் சிவசுப்பிரமணி வெட்டியுள்ளார். பலத்த காயம் அடைந்த அவருடைய மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவசுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், சிவசுப்பிரமணிக்கு பத்து வருடம் சிறை தண்டனை வழங்கி, கடந்த மே மாதம் 25-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. சிவசுப்பிரமணியுடன் அவரது மாமியார், மனைவி சமாதானம் ஆனதால், கடந்த 18-ஆம் தேதி சிவசுபிரமணியின் மாமியார் மற்றும் மனைவி, மூன்று குழந்தைகளுடன் ஆஜராகினர். அப்போது, தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும் என்றும், மேலும் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் என்னை வெட்டிய மருமகனை மன்னித்து விட்டேன். நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம். அதனால் மருமகனை விடுதலை செய்யுங்கள் என மாமியார் கூறினார்.
இதுகுறித்து மனுவும் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அரியானாவை சேர்ந்த ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டால், அதை ஏற்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 482-ன் கீழ் வழக்கை ரத்து செய்யலாம் என்று கூறியுள்ளார். அந்த சட்டத்தின் படி தண்டனையையும் ரத்து செய்யலாம். அதன்படி,கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து வாழ விரும்புகின்றனர். எனவே, இந்த உயர் நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிவசுப்பிரணிக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்கிறேன், அவரை விடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.