கேரள மாநிலம், கோட்டயம் வைக்கத்தை உள்ள வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த வாலிபரை கொல்லத்தை சேர்ந்த ஹசீனா (28) என்ற பெண் தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். தொடர்ந்து அந்த வாலிபரிடம் மகிழ்ச்சியாக பேசி தனக்கு கொஞ்சம் முன்பணம் வேண்டும் என கூறி, அதை நேரில் தருமாறு கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அந்த வாலிபர் பணத்தை கொடுப்பதற்காக ஹசீனா கூறியபடி கொச்சியில் இருக்கும். ஒரு விடுதிக்கு சென்றுள்ளார்.
விடுதி வாசலில் காத்திருந்த ஹசீனா அந்த வாலிபரை வரவேற்று அறைக்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் ஹசீனாவின் கணவர் ஜிதின் (29), அவரது நண்பர் அன்ஷாத் (26) ஆகியோர் அங்கு வந்து. திடீரென அந்த வாலிபரை அடித்து, கட்டி போட்டுவிட்டு அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம், தங்க மோதிரம், செல்போன் ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். அடிபட்ட வாலிபரை விடுதி ஊழியர்கள் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து ஹசீனா மீண்டும் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.15 ஆயிரம் வரை பிடிங்கியுள்ளார். தொடக்கத்தில் வெளியே சொன்னால் அவமானம் என்று எண்ணிய வாலிபர் ஹசீனாவின் தொந்தரவு தாங்க முடியாமல், கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹசீனா, அவரது கணவர் ஜிதின், நண்பர் அன்ஷாத் ஆகியோரை கைது செய்தனர். கணவரின் திட்டப்படி ஹசீனா அந்த வாலிபரிடம் பணத்தை பிடுங்க நடித்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் வேறு யாரிடமாவது இதுபோன்று மிரட்டி பணம் பறித்துள்ளார்களா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.