கர்நாடக மாநிலத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூருவை சேர்ந்த வாசவி சவுகான்(38) தன்னுடைய 10 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணித்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுரேஷ்(38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்த போது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் கூச்சலிட்டபடியால் சக பயணிகள் அவரை கண்டித்து இருக்கிறார்கள். இது குறித்து பயண சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்பாடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் சுரேஷ் கைது செய்தனர். ஆனால் சம்பவம் நடைபெற்றது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் காட்பாடி காவல்துறையினர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையிடம் சிஆர்பிஎப் வீரர் சுரேஷை ஒப்படைத்தனர். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்திருக்கிறார்கள்