கேரள மாநிலத்தில் இரண்டு பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் இறந்ததையடுத்து, கேரள சுகாதாரத் துறை மாவட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், இறந்தவர்களில் ஒருவரின் உறவினர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வைரஸ் அறிகுறிகள்:
நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம். தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என பொதுவான அறிகுறிகள் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், வாய் குழறுதல் போன்ற மோசமான அறிகுறிகள் தோன்றும்.
இந்த வைரஸால் மூளை அழற்சி உண்டாகிவிடும். இதைத் தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம். தொற்று ஏற்பட்ட இடத்தையும், அங்கு செய்யப்படும் மருத்துவ நடவடிக்கைகளையும் பொறுத்து, இறப்பு விகிதம் 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அமையலாம். எனது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.