பீகார் அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த நிச்சயமற்ற நிலை இன்று முடிவுக்கு வரக்கூடும் என்பதால், இன்று மாலைக்குள் ஆளுநரிடம் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து மகாகட்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதீஷ்குமார் முதலமைச்சராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள நிதிஷ்குமார், அதன்பின் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.