ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அதிமுக சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சசிகலா தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “அதிமுகவில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர்பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம். இது அதிமுக. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம்.
ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அதிமுக சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதேபோன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அதிமுக. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்துக் கொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இரு பெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக்கடனாகும்.
திமுகவினர் அதிமுகவை பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திமுக-வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால், எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அதிமுக இயக்கம். திமுக-வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.