கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிழவி வருகிறது.
இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, ஏவுகணை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் கூறிய நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா-வின் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை, திட எரிபொருள் ஏவுகணை என பல்வேறு ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திட உந்துசக்திகளைக் கொண்டு இயங்கக்கூடிய அதிக ஆயுதங்களை உருவாக்குகிறது. அந்த ஆயுதங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், மறைத்து வைப்பதற்கும் எளிதானவை. திரவ உந்துசக்தி ஏவுகணைகளை விட விரைவாக ஏவக்கூடியவை. திரவ உந்து சக்தி ஏவுகணையை ஏவுவதற்கு முன்புதான் அதில் திரவ எரிபொருளை நிரப்பவேண்டும். நீண்ட காலத்திற்கு எரிபொருளை நிரப்பி வைக்க முடியாது என்பதால், திட எரிபொருள் ஏவுகணைகள் மீது வடகொரியா கவனம் செலுத்துகிறது.