குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் அடங்கிய படங்கள், வீடியோக்களை அகற்ற எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சமூக வலைதளங்களில் யாரும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான படங்களை பார்ப்பதற்கான வழியை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரப்பப்படுவதை தடுக்கும்வகையில் அதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் இல்லாத நிலையை உறுதிப்படுவதற்காக எக்ஸ், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி பாதுகாப்பான, நம்பிக்கைக்குரிய இணையத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குறிப்பிட்ட சமூக வலைதளங்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவிட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79-வது பிரிவு திரும்பப் பெறப்படும் என்றும் இந்திய சட்டத்தின்படி அந்த சமூக வலைதளங்கள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.