பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையரை நியமனம் செய்யும் விவகாரத்தில் சீர்திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல தேர்தல் ஆணையரை நீக்கம் செய்ய வேண்டும் என்றாலும் இதே வழிமுறையையே கடைபிடிக்க வேண்டும். தற்போதைய தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக தலையீட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தை மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு அவர்களை நீக்காதபடி தேர்தல் ஆணையத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தை அமைப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் வகுக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக சட்டம் இயற்றவில்லை. அரசியல் நிர்வாகங்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டன. எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.