தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்தது. தெலுங்கானா அரசு ஊழியர்கள், சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் இந்த குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே குரூப் 2 தேர்வுக்காக ஹைதராபாத் அசோக்நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இளம்பெண் பிரவலிகா தற்கொலை செய்து கொண்டார். குரூப் 2 தேர்வை தெலுங்கானா பிஆர்எஸ் அரசு ஒத்திவைத்ததால் விரக்தி அடைந்து அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுக்காக வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார். திடீரென தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. பெரும் கவலையில் இருந்த பிரவலிகா, தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அசோக்நகரில் இளம்பெண் தங்கி தேர்வுக்கு தயாராகி வந்த விடுதி அருகே ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டும் போராட்டம் நடத்தினர். சமூக வலைதளங்களில் #ByeByeKCR என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டுள்ளது.